சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
பண் - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.018   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
பண் - நட்டராகம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
Audio: https://www.youtube.com/watch?v=vCaZ-4UzAlM
7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
Audio: https://www.youtube.com/watch?v=hUJDa9QfMWQ

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.090   ஓங்கி மேல் உழிதரும் ஒலி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[1]
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[2]
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல்
கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம்,
இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[3]
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[4]
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல்,
கபாலியார்தாம்,
துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[5]
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும்
நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு
அரியார்
மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[6]
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து
திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[7]
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-இந்
நீள்வரையைக்
கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன்-ஆள்வினை
கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[8]
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும்,
குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான்,
வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[9]
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்,
நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்,
வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[10]
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.018   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை;
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால்,
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[1]
கட்டக் காட்டின்(ன்) நடம் ஆடுவர்; யாவர்க்கும் காட்சி ஒண்ணார்;
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர்; பாடுவர்; தூய நெய்யால்
வட்டக்குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்டக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[2]
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார்; பெண்ணோடு ஆணும் அல்லர்;
ஊரும் அது ஒற்றியூர்; மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்;
காரும் கருங்கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பு ஆவது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[3]
ஏனக்கொம்பும்(ம்) இள ஆமையும் பூண்டு, அங்கு ஓர் ஏறும் ஏறி,
கானக்-காட்டில்-தொண்டர் கண்டன சொல்லியும், காமுறவே,
மானைத்தோல் ஒன்றை உடுத்து, புலித்தோல் பியற்கும் இட்டு,
யானைத்தோல் போர்ப்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[4]
ஊட்டிக் கொண்டு உண்பது ஓர் ஊண் இலர், ஊர் இடு பிச்சை அல்லால்;
பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர்; ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்(ட்)டிக் கொண்டு உண்பவர்; பாழிதொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டு, உண்பது; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.

[5]
குறவனார் தம்மகள், தம் மகனார் மணவாட்டி; கொல்லை
மறவனாராய், அங்கு ஓர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்;
இறைவனார், ஆதியார், சோதியராய், அங்கு ஓர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[6]
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர்; நற்ற(வ்)வை, என்னைப் பெற்ற;
முற்ற(வ்)வை, தம் அ(ன்)னை, தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்;
செத்தவர் தம் தலையில் பலி கொள்வதே செல்வம் ஆகில்,
அத் தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே!.

[7]
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர் உறைவான்,
தம் பரம் அல்லவர்; சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்;
எம் பரம் அல்லவர்; என் நெஞ்சத் துள்ளும் இருப்பது ஆகில்,
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[8]
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்;
மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்;
சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

[9]
கூடலர் மன்னன், குல நாவலூர்க் கோன், நலத் தமிழைப்
பாட வல்ல(ப்) பரமன்(ன்) அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல(த்) தொண்டன், ஆரூரன், ஆட்படும் ஆறு சொல்லிப்
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.074   மின்னும் மா மேகங்கள் பொழிந்து  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்  அடியார்
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்  நாயேன்
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .

[1]
கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி,
மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி,
ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.

[2]
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி,
புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .

[3]
பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .

[4]
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி,
இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே
சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்   நாயேன்
ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .

[5]
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி,
அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி,
திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .

[6]
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும், வணக்கியும், மராமரம் பொருது,
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், காம்(பு) பீலி சுமந்து, ஒளிர் நித்திலம் கை   போய்,
விரையும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்   நாயேன்
உரையும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை .

[7]
ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள,
காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி,
தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .

[8]
புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து   ஆர்ப்ப,
இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு   எற்றி,
கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .

[9]
மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன்,   ஆரூரன்-
கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல்
தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம்   ஆள்பவரே .

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list